லக்னோ :
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் வரும் 24ம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ளதால், நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், தீர்ப்பை வெளியிட உள்ள அலகாபாத் ஐகோர்ட் நிர்வாகமும், எந்த விதமான அசம்பாவிதமும் கோர்ட் வளாகத்தில் நடந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அலகாபாத் ஐகோர்ட், லக்னோ பெஞ்ச் நீதிபதிகளும், வக்கீல்களும் வரும் 23 மற்றும் 24ம் தேதிகளில், கோர்ட் வளாகத்தில் மக்களின் நடமாட்டத்தைக் குறைப்பதற்காக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டு, அதற்கான திட்டங்களை வகுத்துள்ளனர்.தீர்ப்பை வழங்க உள்ள நீதிபதிகள் கான், சுதிர் அகர்வால் மற்றும் சர்மாவுக்கான பாதுகாப்பு இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வீடுகளுக்கான பாதுகாப்பும் உயர்த்தப்பட்டுள்ளது. அலகாபாத் ஐகோர்ட் நீதிபதிகள் பிரதீப் காந்த் மற்றும் உமாநாத்சிங் உட்பட மூத்த நீதிபதிகள், பார் அசோசியேஷன் பிரதிநிதிகள், மூத்த வக்கீல்கள் பங்கேற்ற உயர்மட்டக் கூட்டமும் சமீபத்தில் நடைபெற்றது. அதில், அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகும் நாளன்று, கோர்ட் வளாகத்தில் எந்த விதமான சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட்டு விடக்கூடாது.
அதற்கேற்ற வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை, விரைவு அதிரடிப்படை மற்றும் மாநில போலீசார் பெருமளவில் ஐகோர்ட் வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் குவிக்கப்பட்டுள்ளனர். வரும் 23, 24ம் தேதிகளில் அலகாபாத் ஐகோர்ட்டுக்கு உள்ளே செல்வோரை கடும் சோதனைக்கு உட்படுத்தவும், தீவிர விசாரணைக்கு பின்னரே அனுமதிக்கவும், வக்கீல்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த இரண்டு நாட்களில் விசாரணைக்கு வரும் வழக்குகளுக்காக, வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வக்கீல்கள் மற்றும் வழக்குதாரர்களுக்கு கோர்ட் வளாகத்திற்கு உள்ளே நுழைய சிறப்பு பாஸ் வழங்கப்பட உள்ளது.
பார் அசோசியேஷன் உறுப்பினர்களைத் தவிர மற்ற எவரின் வாகனங்களையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோர்ட் வாயில்களுக்கு வெளியே பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் மட்டுமே பார்க்கிங் செய்யப்பட்டிருக்கும்.வரும் 24ம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ள கோர்ட் வளாகத்திற்குள், வக்கீல்கள் மற்றும் மீடியாக்கள் நுழையவும் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. வழக்கில் தொடர்புடையவர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட அரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்று ஐகோர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர். பீதி கலந்த அமைதி: இது ஒருபுறமிருக்க, அயோத்தி நகரிலும், இதுவரை இல்லாத வகையில் பீதி கலந்த அமைதி நிலவுகிறது.
தீர்ப்பை எதிர்ப்பார்த்து செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தொலைக்காட்சிகள் அடிக்கடி செய்திகளை ஒளிபரப்பி வருவதால், அயோத்தியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மத்திய படையினர் நடத்திய கொடிஅணிவகுப்பும் ஒருவித பதட்டத்தை உருவாக்கியுள்ளது.தீர்ப்பு வெளியாக உள்ளதால், அயோத்திக்கு வரும் வெளிமாவட்டத்தினர் மற்றும் வெளிமாநிலத்தினர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. வர்த்தக நிறுவனங்களில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்புக்குப் பின் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கவும், சமூக ஒற்றுமையை பேணிக்காக்கவும் இந்து, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த வர்த்தகர்களின் கூட்டமும் நடைபெற்றது.அயோத்தி மற்றும் உ.பி., மாநிலத்தில் முக்கிய இடங்களில் மட்டுமின்றி, அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்திலும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எந்த மாவட்டத்திலும், எந்த விதமான அசம்பாவிதமும் நடக்காமல் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் கண்காணிப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய பிரதேச முதல்வர் சவுகான் உத்தரவிட்டுள்ளார்
Monday, September 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment